ராகுல் காந்தியின் 3 நாள் தமிழக பயணம்- வெளியிட்டார் தங்கபாலு
சென்னை: காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தியின் மூன்று நாள் தமிழகம் சுற்றுப்பயண விவரத்தை அக்கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,
தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி முதல் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை புத்துணர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் வரும் 8ம் தேதி முதல் மூன்று நாட்கள் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாகர்கோவிலில் ஆரம்பிக்கிறார்...
வரும் 8ம் தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கிறார். 11.30 மணிக்கு திருநெல்வேலியில் இளைஞர் காங்கிரஸினரை சந்தித்து பேசுகிறார்.
மதியம் 1 மணிக்கு விருதுநகரிலும், 3.30 மணிக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் இளைஞர்களை சந்திக்கிறார். மாலை 4 மணிக்கு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு இளைஞர்களிடம் உரையாற்றுகிறார்.
மறுநாள் 9ம் தேதி தஞ்சாவூரில் காலை 8 மணிக்கு இளைஞர்களையும், 9.30 மணிக்கு விவசாய இளைஞர்களையும் சந்தித்து உரையாற்றுகிறார்.
பின்னர் காலை 10.30 மணிக்கு விழுப்புரத்திலும், மதியம் 12 மணிக்கு வேலூருக்கும் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு சிஎம்சி கல்லூரி மாணவர்களை சந்திக்கிறார்.
மதியம் 3 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
10ம் தேதி கோவை வருகிறார்...
பின்னர் மாலை 6.30 மணியளவில் சென்னை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கிறார். 10ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை பத்திரிகையாளர்களை ராகுல் சந்திக்கிறார்.
பின்னர் காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி செல்கிறார். காலை 11 மணியளவில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மதியம் 12.30 மணிக்கு சேலம் செல்கிறார். 1.30 மணிக்கு இளைஞர்களை சந்திக்கிறார். மாலை 3 மணிக்கு கோவை செல்லும் அவர் அங்கு இளைஞர்களை சந்திக்கிறார். பின்னர் 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டத்திலும், 5 மணிக்கு தொழில் முனைவோருடனும் பேசுகிறார்.
ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்தை அடுத்து காங்கிரஸார் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவருக்கு பலதத் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications