முகாம்களில் இருந்து தமிழர்களை விடுவிக்க லஞ்சம் கேட்கும் தமிழ் கட்சிகள்!
கொழும்பு: வன்னியில் பெரும் துன்பங்களுக்கும் சொல்ல முடியாத இழப்புக்களுக்கும் ஆளாகி வதை முகாம்களில் அகதி என்ற பெயரில் கைதிகளாக உள்ள தமிழர்களிடம் லட்சக்கணக்கில் பணம்- நகைகளைப் பிடுங்கிக் கொண்டு விடுவிக்கும் வேலையில் சில தமிழ்க் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இவர்கள் முன்பு பல்வேறு பெயர்களில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுக்கள்... இப்போது இலங்கை அரசிடம் துணைப்படைக் குழுக்களாக செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளாகவும் பதிவு பெற்றுள்ளன.
ஒரு நபருக்கு குறைந்தது ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை (இலங்கைப் பணம்) லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு முகாம்களிலிருந்து வெளியே அனுப்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையை விட்டு படகுகள் மூலம் தப்பிச் செல்கிறார்கள்.
முகாமுக்கு வெளியே வவுனியாவில் கொண்டு போய் விட ரூ. 1 லட்சம் கேட்கிறார்களாம். கட்டுநாயகா விமான நிலையத்தில் கொண்டுபோய் விட ரூ.7 லட்சம் வரை கொடுக்க வேண்டுமாம்.
இத் தகவல்களை சண்டே டைம்ஸ் இதழ் புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளது.
இதற்கென சில முகவர்கள் வவுனியாவில் செயற்பட்டு வருகின்றார்களாம். அவர்கள் அங்குள்ள விடுதிகள் மற்றும் விருந்தினர் விடுதிகள் அல்லது வீடுகளை மையப்படுத்திச் செயல்பட்டு வருகின்றனர் என்கிறது அந்தக் கட்டுரை.
முகாம்களில் உள்ளவர்களின் வெளிநாடு வாழ் உறவினர்கள் முதலில் இந்த முகவர்களைத் தொடர்பு கொள்வதாகவும், பின்னர் பேரம் பேசி பணம் கைமாறியதும் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் சண்டே டைம்ஸ் கூறுகிறது.
இலங்கையிலிருந்து வெளி நாடுகளுக்கு அகதி நிலை கோரிச் செல்வோரில் பலரும் கொழும்பில் இருந்து படகுகள் மூலமே தப்பிச் செல்கிறார்கள் எனவும் அதற்காக ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம் வரை பெறப்படுகின்றது எனவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கே மக்கள் படகுகள் மூலம் செல்கிறார்கள் எனவும் அந்த ஏடு கூறியுள்ளது.
முகாம்களில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வெளியேறுகிறார்கள் என்பது தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்ட மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் (ரஜினி படங்களுக்கு புலிகள் பைனான்ஸ் செய்ததாகக் கூறியவர்), ஆனால் அவர்கள் எப்படி வெளியேறுகிறார்கள் என்பதுதான் தெரியவரவில்லை என்றும் குறிப்பிட்டார்.