கிடைத்த வரை லாபம்-ஜெயலலிதா
சென்னை: அரசு புறம்போக்கு நிலங்களை அபகரிப்பதிலும், பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவதிலும் தான் மைனாரிட்டி திமுக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 3 ஆண்டு காலமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி ஆகியவற்றில் அக்கறை செலுத்தாமல் அரசு புறம்போக்கு நிலங்களை அபகரிப்பதிலும், பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவதிலும் தான் மைனாரிட்டி திமுக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அனைத்து வார்டுகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கும், மக்கள் நடமாட முடியாத அளவிற்கும், அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுவ தாகவும் இங்கு நிலவும் சுகாதாரமற்ற போக்கு
காரணமாக தொற்று நோய் பரவி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இது தவிர, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக வார்டு உறுப்பினர்களின் பகுதிகளில் எந்தவிதப் பணிகளும் மேற்கொள்ளப் படாமல் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நகராட்சியாக இருந்த தூத்துக்குடி பெயரளவில் மாநகராட்சியாக மாற்றப்பட்டு இருக்கிறதே தவிர மக்களுக்கு தேவையான எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்தாத மைனாரிட்டி திமுக அரசு, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம், எட்டாவது தெருவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை திமுவைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா போட்டு வழங்கவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கிடைத்த வரையில் லாபம் என்ற நோக்கத்தில் திமுக அரசு செயல்படுவதைத்தான் இது காட்டகிறது. மக்கள் நலத் திட்டங்களில் திமுக அரசு முனைப்பு காட்டுவதாகத் தெரியவில்லை.
எனவே தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் நிர்வாக சீர்கேடுகளை நிகழ்த்தி வரும் தூத்துக்குடிமாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 9ம் தேதி காலை 10 மணி அளவில் தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் கே.ஏ.கே.முகில் தலைமையிலும், தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி நகர கழகச் செயலாளர் எஸ்.ஏசாதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
தூத்துக்குடி நகராட்சி மக்களின் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட் டத்தில் பொது மக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.