ஹோட்டலில் காதலர் மர்ம சாவு-மாணவியிடம் போலீஸ் விசாரணை
சேலம்: சேலம் ஹோட்டலில் காதலியான என்ஜீனியரிங் மாணவியுடன் தங்கிய சாப்ட்வேர் என்ஜீனியர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து அந்த மாணவியைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். 25 வயதான இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு லாட்ஜுக்கு கார்த்திகேயனும், 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் வந்து அறை எடுத்துத் தங்கினர்.
அறைக்குள் போன சில நிமிடங்களில் அந்தப் பெண் அலறியபடி ஓடி வந்தார். கார்த்திகேயன் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கார்த்திகேயனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திகேயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தெரிய வந்ததாவது:
கார்த்திகேயன், ராசிபுரத்தில் இருந்த போது அவருக்கும் பட்டணம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. சந்தியா தற்போது திருச்செங்கோட்டில் என்ஜீனியரிங் 3வது ஆண்டு படித்து வருகிறார்.
கார்த்திகேயன் நேற்று சேலம் வந்து, சந்தியாவை அழைத்துள்ளார். அவரும் சேலம் புறப்பட்டு வந்தார். பஸ் நிலையம் அருகே லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மயக்கமடைவதற்கு முன்பு அறையில் ஒன்றாக சாப்பிட்டதாக போலீஸாரிடம் சந்தியா தெரிவித்துள்ளார். எனவே சாப்பாட்டில் விஷம் இருந்ததா அல்லது மாரடைப்பால் கார்த்திகேயன் இறந்தாரா என்பது தெரியவில்லை.
அழகாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications