ஸ்வைன்:கோவாவில் மேலும் இருவர் பலி-இந்தியாவில் 135 சாவு
டெல்லி: இந்தியாவில் நேற்று மட்டும் பன்றி காய்ச்சல் நோய்க்கு 4 பேர் பலியாகியுள்ளனர். கோவாவில் இருவரும், டெல்லி, கர்நாடகாவில் தலா ஒருவரும் இறந்ததையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் 28ம் தேதி பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 69 வயதான துர்கா பிரசாத் என்பவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு 18 ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. மேலும், அவர் சிறுநீரக கோளாறு காரணமாக டையலசீஸ் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவரது உடல்நிலை மோசமாகி இறந்தார். இதையடுத்து டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இதை தவிர கோவாவில் இருவரும், கர்நாடகவில் ஒருவரும் பலியாகி உள்ளனர். அவர்களின் பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த நோய் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்று மட்டும் சுமார் 147 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,885 ஆக கூடியுள்ளது.
டெல்லியில் 12 வயதான சிறுமி ஒருவருக்கு பன்றி காய்ச்சலால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவரது நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூன்று பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த இயலவில்லை-குலாம் நபி ஆசாத்...
இந்நிலையில் காத்மாண்டுவில் நடந்த உலக சுகாதார மையத்தின் 27வது தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில்,
தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும், பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த இயலவில்லை. இது பரவுவதை தடுக்க நோயின் துவக்கத்திலே கண்டுபிடித்தல், அதற்கு முறையான சிகிச்சை கொடுத்தல் மற்றும் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே முடியும்.
மருத்துவ சேவைகளை அதிகரித்தல், தேவையான மாத்திரைகள் சேமித்து வைத்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
பிரேசிலில் 747 பேர் பலி...
பன்றி காய்ச்சல் உலகிலே பிரேசில் நாட்டில் தான் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கு நேற்று மட்டும் 90 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 747 பேர் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications