ஏழை இளைஞர்களை காங்.கில் சேர்ப்பேன் - ராகுல்

3 நாள் பயணமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார் ராகுல் காந்தி.
இன்று முற்பகல் 11.30 மணிக்கு ராகுல் காந்தி நாகர்கோவில் வருவதாக இருந்தது. ஆனால் விமானம் தாமதமானதால் பிற்பகல் 12.30 மணி வாக்கில்தான் ராகுல் காந்தி நாகர்கோவில் வந்தடைந்தார்.
திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி எம்.பி தொகுதிக்குட்பட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார். மேலும் மீனவ இளைஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரை மேடைக்கு அழைத்து நேடியாகவே பேசினார். பின்னர் அவர் பேசுகையில் பஞ்சாப், குஜராத், மாநிலங்களில் கட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படுத்தப்படும்.
ஏழை இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வர எல்லா நடவடிக்கையும் முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.
'மீனவ நண்பன்' ராகுல் காந்தி!
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் பள்ளி வளாகத்தில் மீனவ இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மீனவர்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை ராகுலிடம் வைத்தனர். அவற்றை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மொழிபெயர்த்து ராகுலிடம் கூறினர்.
இந்தக் கூட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 1500 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 200 பேர் பெண்கள் ஆவர். வேறு யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இந்த சந்திப்பு குறித்து கூட்டத்தில் பங்கேற்ற 35 வயதான மேரி என்ற மீனவப் பெண் கூறுகையில், மிகப் பெரிய அனுபவம் இது. எங்களிடம் வந்து ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர் இப்படி உட்கார்ந்து நிதானமாக எங்களது குறைகளை காது கொடுத்துக் கேட்டது இதுதான் முதல் முறையாகும்.
எங்களது குறைகளை ராகுல் காந்தி மிகுந்த அக்கறையுடன் கேட்டார். அவற்றை நிச்சயம் நிவர்த்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். அவரைப் பார்க்கவும், பேசவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு மீனவர்களின் நண்பனாகியுள்ளது ராகுல் காந்தியாகத்தான் இருக்கும்.
மர்மப் பையால் பரபரப்பு...
முன்னதாக ராகுல் வந்திறங்கிய மைதானத்தில் மர்ம பை கிடந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சரியாக 12.28 க்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார் ராகுல். அவரது வருகைக்குஒரு மணி நேரம் முன்பாக மர்ம பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது பார்த்து அதிர்ந்தனர். இதனை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சென்றார்...
நாகர்கோவிலில் நிகழ்ச்சியை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார். நெல்லையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக ராகுல் பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பாளை. சாராடக்கர் பள்ளியில் ஆண்களுடனும், நூற்றாண்டு மண்டபத்தில் பெண்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவருக்கு பாதுகாப்பாக ராணுவ விமானமும் வந்துள்ளது. அவருடன் தமிழக காங்., தலைவர் தங்கபாலு மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகியோரும் வந்தனர்.
மதுரையில்...
பின்னர் மதுரை சென்று காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவியருடன் நடக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் மதுரையில் நடைபெறும் எஸ்.சி, எஸ்.டி. மாநாட்டில் கலந்து கொள்கிறார். இரவில் மதுரையில் தங்குகிறார்.
நாளை வேலூர்...
இன்றைய பயணத்தை முடித்துக் கொண்டு நாளை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களை சந்திக்கிறார் ராகுல்.
அதேபோல தஞ்சையைச் சேர்ந்த இளம் விவசாயிகள், வேலூர், விழுப்புரத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளர்களை சந்திக்கிறார் ராகுல்.
சென்னை...
பின்னர் சென்னை திரும்பும் ராகுல் காந்தி, அங்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களை சந்திக்கிறார். பின்னர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
கிருஷ்ணகிரி-சேலம்:
புதன்கிழமை காலை அவர் கிருஷ்ணகிரி புறப்பட்டுச் செல்கிறார். அதன் பின்னர் சேலம் செல்லும் ராகுல் அங்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து உரையாடுகிறார்.
கோவை...
பின்னர் கோவை செல்லும் ராகுல் காந்தி இளம் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். பொதுக் கூட்டம் ஒன்றிலும் பங்கேற்கிறார்.
ராகுல் காந்தியின் சந்திப்பின்போது இளைஞர்கள், இளைஞர் காங்கிரஸார், மாணவர், இளம் தொழிலதிபர்கள், இளம் தொழிலாளர்கள் என இளைஞர் பட்டாளத்தை மட்டுமே குறி வைத்து அவரது நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிக்கும், இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கும், ராகுலின் பயணம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1967ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதன் பின்னர் திமுக அல்லது அதிமுக ஆகிய ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் சேர்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதை மாற்றியமைக்கும் திட்டத்துடன்தான் ராகுல் காந்தி முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
புதிய அரசியல் சக்தியாக உருவாகியுள்ள விஜயகாந்த்தின் தேமுதிகவை தனது பக்கம் இழுக்க காங்கிரஸ் தொடர்நது முயன்று வருகிறது. அதேபோல நடிகர் விஜய்யையும் கட்சியில் சேர்க்க முயன்று வருகிறது.
விஜய் வருகையை காங்கிரஸார் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் விஜய் இதுகுறித்து வாயே திறக்காமல் உள்ளார்.
இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தியின் வருகை பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளை காங்கிரஸார் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications