ஜாதி மோதல்கள் மாணவர் முன்னேற்றத்தை தடுக்கும் - வைகோ
நெல்லை: கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தை தடை செய்யும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பாளை சேவியர் கல்லூரி வாளகத்தில் விண்ணரசி ஆலய பொன் விழா நடந்தது. விழாவிற்கு மதுரை மறைமாநில சேசு சபை தலைவரின் தலைமை ஆலோசகர் அருளானந்தம் தலைமை வகித்தார். பாளை சேவியர் கல்லூரி கலைமனைகள் அதிபர் வின்செண்ட் பிரிட்டோ வரவேற்றார்.
விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் கொடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழர்களின் கண்கள், கைகளை கட்டி இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு கொல்கின்றனர். இதனால் நமது மனம் வேதனையடைகிறது.
இலங்கை தமிழர்களுக்கு கிறிஸ்தவர்கள் உணவு, மருந்துகள் ஆகியவற்றை கொடுத்து உதவி வருகின்றனர். அவர்களின் தியாக உணர்வுகளை மறக்க முடியாது.
நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது சாதி மோதல்கள் கிடையாது. ஆனால் தற்போது கல்லூரியில் சாதி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தை தடைபடுத்தும்.
அப்போதைய மாணவர்களை காட்டிலும் இப்போது மாணவர்கள் நல்ல மதிநுட்பம் நிறைந்தவர்களாக உள்ளனர் என்றார் வைகோ.