விவசாயிகள் காங்கிரஸில் இணைய வேண்டும்-ராகுல்

தமிழக பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று காலை தஞ்சாவூரில் தனது 2வது நாள் பயணத்தைத் தொடங்கினார்.
ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை வந்தடைந்த அவர் அங்கு நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் உள்ளவர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது ராகுல் காந்தி கூறுகையில்,
விவசாயிகளும், இளைஞர்களும் கட்சியில் ஆர்வத்துடன் இணைவதற்கு சில தடைகள் நிலவி வருகிறது. இந்த தடை நீக்கப்படும். பணபலம் கொண்டவர்கள் மட்டும் தான் கட்சியில் சோபிக்க முடியும் என்ற நிலை மாற்றப்படும்.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களும், விவசாயிகளும் ஆர்வத்துடன் இணைந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்றார்.
தஞ்சை பயணத்தின்போது, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு, தண்ணீர் பயன்பாடு மற்றும் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
மத்திய அரசின் கடன் தள்ளுபடி, குறித்து நிறை குறைகளையும் கேட்டார் ராகுல்.
ஏர்போர்ட்டில் புதுச்சேரி காங்கிரசாருடன் ஆலோசனை:
பின்னர் புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள விமான நிலையத்திலேயே இளைஞர் காங்கிரஸாருடன் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு காரணமாக அவர் நகருக்குள் அழைத்துச் செல்லப்படவில்லை.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்திற்குக் கிளம்பினார் ராகுல் காந்தி. முதலாவதாக திருக்கோவிலுக்கு அவர் சென்றார். அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு...
ராகுல் காந்தி சென்னைக்கு இன்று மாலை வருகிறார். இதையொட்டி மிக மிக அதிகபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார்.
ராகுல் காந்தி பாதுகாப்புக்காக 2000 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர் கார் செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications