வெங்காய விலை-கண்ணீர்விடும் விவசாயிகள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பு ஆண்டில் நெல் அறுவடைக்கு பின்னர் பெரும்பாலான விவசாயிகள் பல்லாரி வெங்காயம் மற்றும் சோளம் பயிரிட்டனர்.
இதில் சோளம் பயிரிட்டவர்கள் பலர் அறுவடை செய்துவிட்டனர். அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காத போதிலும் வருமானம் கையை கடிக்கவில்லை.
ஆனால் பல்லாரி வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பாடுதான் தற்போது திண்டாட்டமாகி இருக்கிறது. அவர்களில் கடந்த மாதம் ஓணம் பண்டிக்கைக்கு முன்பாக பல்லாரி வெங்காயத்தை விற்பனை செய்த சில விவசாயிகள் நஷ்டம் இல்லாமல் தப்பித்து கொண்டனர்.
ஆனால், சிலர் பல்லாரி நன்றாக விளையட்டும் என காத்திருந்தனர். தற்போது அவர்களுக்கு பல்லாரி மகசூல் நன்றாக அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பல்லாரியின் விலை அடிமட்டத்துக்கு வந்து ரூ. 6 முதல் 8 வரை தான் வாங்கப்படுவதால் விவசாயிகள் கண்கள் கலங்க துவக்கியுள்ளன.