தரம் தாழ்ந்துவிட்ட பாஜக-ஷெகாவத்
டெல்லி: மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கை பாஜக நடத்திய முறை சரியல்ல என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் அக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த பைரோன்சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்தவர் ஷெகாவத் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராகும் தகுதி அத்வானியை விட எனக்கே உண்டு என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஷெகாவத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஜஸ்வந்த் சிங் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஷெகாவத்,
ஜின்னா குறித்து ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தை கவனமாகப் படிக்கும் அனைவரும் அதில் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்வார்கள். இந்த புத்தகத்தை எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங்கை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அதைவிட்டு விட்டு அவரை கட்சியை விட்டு பாஜக நீக்கியது தவறு.
சமீபகாலமாக பாஜகவின் தரம் தாழ்ந்துவிட்டது. கட்சியில் ஒழுங்கு குறைந்துவிட்டது. தவறுகள் அதிகரித்து வருகின்றன. கட்சித் தலைவர்களிடையே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லை.
நான் கட்சியில் இல்லாவிட்டாலும் எப்போதும் மக்களுடன் தான் இருக்கிறேன். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஜஸ்வந்த் சிங்கை பாஜக நெருக்கி வருவதும் கடும் கண்டனத்துக்குரியது.
ஒரு எம்பி என்ற வகையில் அந்தப் பதவியில் தொடர அவருக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமையில் பாஜக எப்படி தலையிடலாம். முதலில் நாடாளுமன்ற விதிகளை, மரபுகளை மதிக்க பாஜக தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் ஷெகாவத்.
சந்திப்பு குறித்து ஜஸ்வந்த் சிங் கூறுகையில், பல்லாண்டுகளாக எனது நண்பர் ஷெகாவத். கட்சிக்காக உழைத்த மாபெரும் தலைவர். உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காகவே அவரைச் சந்தித்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications