கோவை பங்கு சந்தை அங்கீகாரம்-ரத்து செய்ய நீதிமன்றம் தடை
கோவை: கோயம்புத்தூர் பங்கு சந்தையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
கோயம்புத்தூர் பங்கு சந்தையில் போதிய பரிவர்த்தனைகள் இல்லை என்பதை காரணம் காட்டி அதை மூடுவதற்காக செபி அமைப்பிடம் அனுமதி கோரப்பட்டது.
இதையடு்தது கடந்த ஜூலை 3ம் தேதி கோயம்புத்தூர் பங்குச் சந்தை உறுப்பினர்களின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பங்குச் சந்தையின் அங்கீகாரத்தை ரத்து செய்து மூடுவது என தீர்மானம் இயற்றப்பட்டது.
ஆனால், அந்த கூட்டம் விதிமுறைகளின்படி கூட்டப்படவில்லை. இதில், தகுதியில்லாத உறுப்பினர்கள் பலர் பங்கேற்று நிறைவேற்றியுள்ளனர். எனவே இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றார்.
இந்த மனு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிபதி, கோயம்புத்தூர் பங்கு சந்தையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார்.