அண்ணா பல்கலையில் அரசியல்-'ராகுலுக்கு என்ன தகுதி?'
சென்னை: எந்த தகுதியின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டது என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய நதிகள் இணைப்பு ஆபத்தானது என்ற ராகுல் பேச்சு பொறுப்பற்றது, கண்டிக்கத்தக்கது. நதிகள் இணைப்பால் என்ன ஆபத்து வந்துவிடும் என்பதை விளக்கட்டும் காங்கிரசார்.
தேசிய நதிகள் இணைப்பிற்குப் பல அறிஞர்கள், நிபுணர்கள் அளித்த ஆய்வுகள் மத்திய அரசிடம் இருக்கின்றன.
நதிகளை இணைப்பதன் மூலம் உபரியான வெள்ள நீர் வீணாவதும், பயிர்கள், உயிர்கள் நாசமடைவதும், வறட்சியால் விவசாயத் தொழில்கள் முடங்கி மக்கள் வாடுவதும் தவிர்க்கப்படும்.
மாநிலங்களுக்கு இடையே நதி நீரால் ஏற்படும் சச்சரவுகளைப் போக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுக்கவில்லை. அப்படி நதி நீர் இணைப்பால் சச்சரவு நீங்கிவிட்டால் மத்திய அரசிடம் பஞ்சாயத்திற்குச் செல்ல வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு இருக்காது. இதனைத்தான் காங்கிரஸ் செயலர் ராகுல் ஆபத்து என்கிறாரோ?.
சென்றமுறை ஆட்சி ஏற்றவுடன் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் நதி நீர் இணைப்பு ஆய்வில் இருப்பதாகவும், விரைவில் அது செயல்படுத்தத் திட்டம் வகுக்கப்படும் எனவும் பதிலளித்தது.
ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் அதனைச் செயல்படுத்த மத்திய அரசு என்ன செய்தது என்று தெரியவில்லை?
ராகுல் பேசிய பேச்சு மத்திய அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டின் நலனைத் தூக்கியெறிந்து ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதில் கவனம் செலுத்துகிறது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணமாகும்.
காங்கிரஸ் எம்.பியான ராகுல் பேச அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், வேறு சில இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேசியதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது ஒரு மோசமான முன் உதாரணம், நாளை மற்ற அரசியல்வாதிகளும்பேச இது வழிவகுக்கும்.
எந்தத் தகுதியின் அடிப்படையில் ராகுலுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டது?. தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக பொறுப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்று நடக்காமல் இருக்கவும் அரசு உத்தரவாதத்தை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பொறுப்பில்லா ராகுல்..
இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில்,
இந்தியாவில் நதிநீர் இணைப்பு என்பது நாட்டை நாசப்படுத்தி விடும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல கட்சிகள் நதிநீர் இணைப்பு தேவை என்று தேர்தலின் போது கோரிக்கையை வைத்தோம்.
எனவே ராகுலின் இந்த கருத்திற்கு தமிழக முதல்வர் உடன்படுகிறாரா? அல்லது மாறுபடுகிறாரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
நீர்வள மேம்பாட்டு துறை அமைச்சகம் நதிநீர் இணைப்பு சாத்தியம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கும் உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ராகுல்காந்தி இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் பேசி உள்ளார் என்றார்.