பலகோடி மதிப்பு செந்தூர கட்டைகள் பறிமுதல்
செங்கோட்டை: வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள செந்தூரக் கட்டைகள் லாரியுடன் பறி்முதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை-சுரண்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இன்று அதிகாலையில் 3.30 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள செந்தூரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 7 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
அங்கிருந்த லாரி, ஸ்கார்பியோ கார் ஆகியவற்றையும் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சிகப்பு செந்தூரக் கட்டைகளை கன்டெய்னர் லாரி மூலம் கேரளாவுக்கு கொண்டு போய் அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வனஅலுவலர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் வந்து செந்தூரக் கட்டைகளை கணக்கெடுத்தனர்.
இதையடுத்து திருச்சூரை சேர்ந்த இக்பால் (45), அக்பர் (24), அப்துல்காதர், சாலக்குடியைச் சேர்ந்த சலீஷ் (24), ராய் (23), பாலக்காட்டைச் சேர்ந்த சுனில்குமார் (24), பெரஸ்கான் (25) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.