18ம் தேதி முதல் சென்னை-டெல்லி துரன்டோ ரயில்
சென்னை: சென்னை, டெல்லி இடையே ஓடும் துரன்டோ ரயில் சேவையை வரும் 18ம் தேதி சென்னையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைக்கிறார்.
ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் புதிய திட்டமான துரன்டோ ரயில்கள் நாடு முழுவதும் சுமார் இயக்கப்பட இருக்கின்றன.
வங்காள மொழியில் துரன்டோ என்றால் வேகம் என்று பொருள். இதற்கு ஏற்ப இந்த ரயில் சுமார் 130 கிமீ வேகத்தில் செல்லும் என்றும், வழியில் எங்கும் நிற்காது. சென்னையில் ஏறியவர்கள் நேராக டெல்லியில் தான் இறக்கிவிடப்படுவார்கள்.
இதன் காரணமாக டிக்கெட்டுடன் சேர்ந்து உணவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகளுக்கு ஐஆர்சிடிசி மூலம் நான்கு வேளை உணவு வழங்கப்படுகிறது.
காலை 7.30 மணிக்கு இட்லி, சாம்பார், சட்னியுடன் சிற்றுண்டியும், 11 மணிக்கு சூடான காபி அல்லது டீ வழங்கப்படும். மதியம் 12.30 மணிக்கு சைவ மற்றும் அசைவ உணவுகள் தரப்படுகிறது.
மாலை 4 மணிக்கு சுவையான காபி அல்லது டீயுடன் நொறுக்கு தீனிகள் வழங்கப்படுகின்றன. இரவு உணவு 7 மணிக்கு வழங்கப்படும். இது பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப சைவம் அல்லது அசைவமாக கொடுக்கப்படும்.
இந்த ரயில்கள் வரும் 18ம் தேதி முதல் தண்டவாளத்துக்கு வருகின்றன. டெல்லி, மேற்கு வங்க மாநிலம் சில்டா ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் முதல் துரன்டோ ரயிலை, சியல்டா நகரில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி துவக்கி வைக்கிறார்.
அதே நாள், சென்னையில் இருந்து டெல்லி நிஜாமுதினுக்கு கிளம்பும் மற்றொரு ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொடியசைத்து துவக்குகிறார்.
இந்த ரயில்கள் ஏசி இருப்பவை, இல்லாதவை என இரண்டு ரகங்களில் வருகிறது. ஆனால், எந்த துரன்டோ ரயிலிலும் முன்பதிவு செய்யாத பெட்டி கிடையாது.
வாரந்திர ரயிலான இது ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 6.40 மணிக்கு சென்னையில் கிளம்பி மறுநாள் இரவு 10.35 மணிக்கு நிஜாமுதின் செல்லும். அங்கிருந்து புதன் கிழமை மாலை 4 மணிக்கு கிளம்பி மறுநாள் இரவு 8.10 மணிக்கு சென்னை வரும்.
இதில் இரண்டு டயர் 2 ஏசி பெட்டிகள் மற்றும் டயர் 3 ஏசி பெட்டிகள் உள்ளன. மேலும், 10 ஸிலிப்பர் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.