அண்ணா பிறந்தநாள்-கோவை குண்டுவெடிப்பு கைதிகள் 9 பேர் விடுதலை
இந்த 9 பேரும் 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அனுமதியின்றி குண்டுகள், ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் 307ன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களில் 9 பேர் இன்று காலை 7.30 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளனர். மற்ற ஒருவர் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் தொடர்ந்து சிறையில் இருப்பார். இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்.
விடுதலையானோர் விவரம்: முகம்மத் இப்ராகிம், அப்துல் ரகீம், அப்துல் பாரூக், அப்பாஸ், முகம்மத் ரபீ்க், அப்துல் ரவூப், அஷ்ரப், பக்ருதீன் அலி அகமமத் மற்றும் சாகுல் ஹமீத்.
யூசுப் ஷாஜகான் என்பவருக்கும் விடுதலை உத்தரவு வந்துள்ளது. அவருக்கு வேறு வழக்கில் தொடர்பு இருப்பதால், விடுதலை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்ச்சியையொட்டி 1,405 கைதிகளை அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் கைதிகள் போராட்டம்:
இந் நிலையில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இன்று புழல் சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்ச்சியையொட்டி 140 கைதிகளை அரசு விடுவித்தது.
ஆனால் இந்த ஆண்டு கோவை சிறை கைதிகளை மட்டுமே விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறையின் 1வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 750 கைதிகள் இன்று காலை உணவுக்காக கூடியபோது திடீரென தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.