இந்தியா-பன்றி காய்ச்சல் பலி 200ஐ தாண்டியது

நேற்று இந்த நோய்க்கு மகாராஷ்டிராவில் 5, டெல்லி 2, குஜராத்தில் ஒருவர் இறந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் இறந்தவர்களில் மூன்று பேர் புனேவை சேர்ந்தவர்கள். தலா ஒருவர் மும்பை மற்றும் நாக்பூரை சேர்ந்தவர்கள். குஜராத்தில் சுரத்தில் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
டெல்லியில் பலியான வாலிபருக்கு 26 வயது மட்டுமே ஆகிறது. டெல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரைவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 87, கர்நாடகாவில் 66, குஜராத்தில் 18 பேர் இறந்துள்ளனர்.
அதேநேரத்தில் நேற்று மட்டும் மேலும் 229 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,588 ஆக உயர்ந்துள்ளது.
மெக்சிகோவை முந்திவிடும்...
இந்தியாவில் பலி எண்ணிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் இந்தியா, இந்த பன்றி காய்ச்சல் தோன்றிய மெக்சிகோவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
நேற்று வரை மெக்சிகோவில் 23 ஆயிரத்து 245 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தி, அதில் 215 பேர் பலியாகியுள்ளனர். அதாவது இந்தியாவை விட சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரு நாடுகளிலும் ஒரே போல் தான் உள்ளது.
பிரேசிலில் 884 பேர் பலி...
உலக அளவில் இந்த நோய் பிரேசிலில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இதுவரை 884 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 641 பேரும், அர்ஜென்டினாவில் 514 பேரும் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications