உளவுப்பிரிவு ஏடிஜிபி ஜெய்ஸ்வால் மாற்றம்
சென்னை: தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அனூப் ஜெய்ஷ்வால் மாற்றப்பட்டுள்ளார்.
அவர் தலைமையக ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிகாரம் இல்லாத பதவியாகும்.
அவருக்குப் பதில் வேறு யாரும் உடனடியாக உளவுப் பிரிவு ஏடிஜியாக நியமிக்கப்படவும் இல்லை.
பிருந்தா கைது-பரூக்கி விசாரணை:
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா கரத் உத்தப்புரம் சென்றபோது நடந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு செய்திக் குறிப்பில்,
மதுரை மாவட்டம் உத்தப்புரத்திற்கு 12ம் தேதியன்று பிருந்தா கரத் வருகை தந்தார். அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தெல்லாம் விசாரணை செய்து, நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வற்புறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்டு, அந்த விசாரணைக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதையொட்டி தமிழக அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எப்.பரூக்கியை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்தும், 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை அரசுக்கு அளித்திட வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.