இந்திய உதவிகள் தமிழர்களுக்கு கிடைத்ததா? -கருணாநிதி
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த நிவாரண உதவிகள் எவ்வாறு பயன்பட இருக்கிறது என்ற விவரத்தை அந் நாட்டு அரசிடம் மத்திய அரசு கேட்டுப் பெற்று விவரத்தை வெளியிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: வேளாண்மை மன்ற ஒழுங்கு முறை சட்டம் விவசாயிகளுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும், அதனால் அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சில கட்சிகள் (மதிமுக) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறதே?
பதில்: சில அரசியல் கட்சிக்காரர்கள், சில பத்திரிகைகள், நண்பர் சோலை போன்ற நடுநிலை சிந்தனையாளர்கள் வெளியிட்ட கருத்துகளையொட்டி அந்தச் சட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். அப்படி நிறுத்தி வைத்திருப்பதே ரத்து செய்வதற்காக எழுதப்பட்டுள்ள முன்னுரை தான் என்பதை அந்தச் சில கட்சிகள் புரிந்து கொண்டு, அதற்குத் தாங்கள் தான் காரணம் என்பதைப் பதிவு செய்வதற்காக இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன.
அந்த சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகின்றன. இரண்டு மாதங்களுக்கு பிறகு அரசே தானே முன் வந்து அந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கப் போவதாக அறிவித்த பிறகுதான், பிரதான எதிர்க்கட்சியின் தலைவியும், இப்போது தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்ற கட்சியும் அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கூறத் தொடங்கியுள்ளார்கள். தற்போது தீர்மானம் நிறைவேற்றிய கட்சியின் சார்பில், இந்தச் சட்டம் பேரவையிலே நிறைவேற்றப்பட்ட நேரத்தில் ஏதாவது எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்களா என்றால் கிடையாது.
கேள்வி: இலங்கையில் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கைக்கு ஆஸ்திரேலியா ரூ. 15 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?
பதில்: ஆம்; இத்தகவலை ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்திய அரசைப் பொறுத்தவரையில்15 கோடி ரூபாய் அல்ல, இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக 500 கோடி ரூபாய் வழங்கும் என்று அறிவித்து, அத்துடன் தமிழகத்தின் சார்பில் ஏற்கனவே 25 கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ரொக்கமாக 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறோம்.
இந்த உதவிகள் எவ்வாறு இலங்கையில் இன்னமும் அகதிகளாக உள்ள தமிழர்களுக்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்ற விவரங்களை இந்திய அரசு, இலங்கை அரசிடமிருந்து பெற்று வெளியிட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்.
இதுபற்றி நான் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலே கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமும் பேசியிருக்கிறேன்.
சிதம்பரம் நடராஜர் ஆலயம்..
கேள்வி: சிதம்பரம் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது சரி தான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறதே; இப்போது வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் என்னவாகும்?
பதில்: தீர்ப்பில் முக்கியமாக "கோவில் பணம் முறைகேடு செய்யப்பட்டது; 400 ஏக்கர் நிலத்தின் நிலைமை என்னவென்றே நூறாண்டுகளுக்கும் மேல் தெரியாமல் இருப்பது; நிர்வாக அதிகாரியின் நியமனத்துக்குப் பின் ஏற்பட்ட மேம்பாடுகள்- இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நிர்வாக அதிகாரியின் நியமனத்தில் இந்தக் கோர்ட் தலையிட்டால், பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவிலைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறி விடுவது போலாகும்'' என்று கூறப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்கு முன் கூட்டியே தில்லை நடராஜர் தன் காலைத் தூக்கிக் காட்டியிருக்கிறாரே?
கேள்வி: இன்றைய "தீக்கதிர்'' நாளேட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் "ஊதிய விகிதங்களில் இந்தியாவிலேயே கடைக் கோடி நிலைக்குத் தாழ்ந்து போன கசப்பான அனுபவம் தமிழக அரசு ஊழியர் இயக்கத்திற்கு உண்டு'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதே?
பதில்: இந்தக் குறிப்பினை தமிழக அரசு அலுவலர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேதான்.
இதை ஒவ்வொரு அரசு அலுவலரும் ஞாபகத்திலே கொண்டுள்ளார்கள். ஆனால் கட்டுரை தீட்டியிருப்பவருக்குத்தான் அது நினைவில்லை போலும்!. ஒருவேளை கடந்த கால ஆட்சியை மனதிற்கொண்டு எழுதியிருப்பார் போலும்! என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications