அக்காவுக்கு தலசீமியா-ஒழிக்க உதவிய தம்பியின் ரத்தம்!

பொம்மைகளுடன் விளையாட வேண்டிய வயதில், ரத்த மாற்று சிகிச்சையுடன் மல்லாடிக் கொண்டிருந்த சிறுமி எட்டு வயதான தாமிரபரணி.
பிறவியிலேயே தலசீமியா எனப்படும் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர் தாமிரபரணி. அவருக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது தலசீமியா வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ந்து ரத்த மாற்று சிகிச்சையை மேற்கொண்டு வந்தார் தாமிரபரணி. மாதம் ஒருமுறை இதை எடுத்துக் கொண்டிருந்தார் தாமிரபரணி. ஆனால் தற்போது தனக்குப் பிறந்த தம்பியின் உருவில் மறு பிறவி எடுத்துள்ளார் தாமிரபரணி.
தாமிபரணி மறு பிறவி எடுக்க பெரும் உதவியாக இருந்துள்ளது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை எனப்படும் செல் தெரபி.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் ரேவதி ராஜ் தலைமையிலான குழுவினர் இந்த ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு தாமிரபரணிக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளனர்.
தாமிரபரணியின் தாயாருக்குப் பிறந்த ஆண் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தை எடுத்து ஸ்டெம் செல் தெரபி மூலம் சிறுமி தாமிரபரணிக்குச் செலுத்தி அவளது தலசீமியாவை இன்று இருந்த இடம் தெரியாமல் விரட்டியுள்ளனர் அப்பல்லோ டாக்டர்கள்.
இதன் காரணமாக தற்போது தலசீமியா என்ற பெரும் போராட்டத்திலிருந்து தாமிரபரணி முற்றிலும் விடுபட்டுள்ளாள். கடந்த மார்ச் மாதம் முதல் அவளுக்கு ரத்த மாற்று சிகிச்சை தரப்படவில்லை.
இந்தியாவில் தனது சகோதரனின் தொப்புள் கொடியிலிருந்து எடுத்த ரத்தத்தைப் பயன்படுத்தி தலசீமியாவை விரட்டியுள்ள செயல் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாம்.
சிறுமி தாமிரபரணியின் தந்தை செந்தில் குமார் ஒரு தச்சர். இவரது மனைவி சரோஜினி. குழந்தைக்கு தலசீமியா என்று அறியப்பட்டவுடன் இருவரும் உடைந்து போய் விட்டனர்.
மகளுக்கு தலசீமியா வந்த காரணத்தால், அடுத்தடுத்து 2 முறை கருவுற்றும் அதைக் கலைத்து விட்டார் சரோஜினி.
இந் நிலையில் டாக்டர் ரேவதி ராஜை, செந்தில்குமார் தம்பதி சந்தித்தபோது அவர்தான், இன்னொரு குழந்தையை கண்டிப்பாக பெற்றுக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தை ஆரோக்கியமான முறையில் இருந்தால் அதன் தொப்புள் கொடி ரத்தத்தைப் பயன்படுத்தி தலசீமியாவைக் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் கர்ப்பமானார் சரோஜினி. அவரது கரு குறித்த சோதனையின்போது கரு ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள லைப் செல் என்ற தொப்புள் கொடி ரத்தப் பாதுகாப்பு ஆய்வகத்தினர், சரோஜினியின் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறக்கும்போது அதன் தொப்புள் கொடி ரத்தத்தை எடுத்துப் பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை இலவசமாக செய்ய முன்வந்தது.
சரோஜினிக்கு குழந்தை பிறந்தது. உடனடியாக குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த ரத்தம், திரவ நைட்ரஜனில் -196 டிகிரி
வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்பட்டது. அடுத்து திசுக்கள் பொருத்தமானதாக இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது. அதில் பொருத்தம் இருப்பது தெரிய வந்தது. ஆனால் ரூ. 10 லட்சம் இருந்தால்தான் ஸ்டெம் செல் தெரபியை மேற்கொள்ள முடியும் என்று டாக்டர்கள் கூறவே திகைத்தனர் செந்தில்குமார் தம்பதியினர்.
இருப்பினும் நல்மனம் படைத்த பலரும் தாராளமாக உதவவே பணம் சேர்ந்தது. இதையடுத்து தாமிரபரணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கியது.
இந்த சிகிச்சை வெற்றி பெற்று தற்போது தலசீமியா முற்றிலும் குணமாக்க்பட்டு விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்குப் புத்துயிர் கொடுத்த தம்பி புகழேந்தியை கையில் தூக்கிக் கொஞ்சியபடி மகிழ்ச்சியோடு இருக்கிறார் தாமிரபரணி. இதுகுறித்து சிறுமி தாமிரபரணி கூறுகையில், எனக்கு முடியெல்லாம் கொட்டிப் போய் விட்டது. இருந்த கொஞ்சம் முடியையும் கூட சிகிச்சையின்போது வெட்டி விட்டனர்.
எனக்குப் பயமாக இருந்தது. மறுபடியும் ரத்த மாற்று சிகிச்சைக்காக கையெல்லாம் குத்தப் போகிறார்கள் என வேதனைப்பட்டேன். ஆனால் டாக்டர்கள் எனது வியாதியையே குணப்படுத்தியுள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாள்.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் தாமிரபரணியின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம்/டிஎல் என்ற அளவில் உள்ளதாம். அவளது ரத்தத்தில் நோய் பாதித்த எந்த செல்லும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications