மீனவர்கள் கடத்தல்-இலங்கைக்கு கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை தந்த உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் செயலை கடுமையாக கண்டிக்கிறேன். அத்தோடு, இது போன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு ஏற்படும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி மிகவும் கோபத்துடன் கூறியுள்ளார்.
மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு முதல்- அமைச்சர் கணாநிதி தலைமையில் நேற்று தொடங்கியது.
இன்று கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட 2-வது நாள் மாநாடு நடந்தது. அப்போது முதல்வர் பேசுகையில், தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கைக் கடற்படையினர் அட்டூழியமாக கடத்திச் சென்றதைக் குறிப்பிட்டு கடுமையாக கண்டித்தார்.
முதல்வர் பேசுகையில்,
ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை அன்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று, ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காகக் காத்திருந்த வேளையில் இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணி அணியாக வந்ததைக் கண்டு, அச்சமுற்று தமிழக மீனவர்களின் பெரும்பாலான படகுகள் அவசரம் அவசரமாக கரைக்குத்திரும்பும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன் பிடிச்சாதனங்களையும் கடலில் தூக்கி வீசி, மீனவர்களைத் துப்பாக்கியால் கட்டையால் தாக்கி, படகுகளை சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இது இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச்சம்பவம் அல்ல. இது போன்று இது வரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நிகழ்வின் போதும், தமிழக அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்டுள்ளதோடு, இலங்கைக் கடற்படையினருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கைக்கடற்படையினரால் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தமிழக அரசின் தலையீட்டின் அடிப்படையில், பல்வேறு நிலைகளில் மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சு வார்த்தைகளும் நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன.
இலங்கைக் கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இது போன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு ஏற்படும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, மாவட்ட கலெக்டர்களின் இந்த மாநாட்டின் வாயிலாக இலங்கைக் கடற்படையினருக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.
அனுராதாபுரம் சிறையில் அடைப்பு:
இந் நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் நேற்று அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமிருந்த 17 பேரையும் இன்று இலங்கை போலீசார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அந்தோணி ஜூசன் பிள்ளை 17 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 17 பேரும் அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சென்ற 5 படகுகளையும் பராமரிக்குமாறு, இலங்கை கடற்படைக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் தேமுதிக உண்ணாவிரதம்:
இந் நிலையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கணடித்து வரும் 29ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் துயரை மத்திய அரசு உணருவதற்காகவே இந்த உண்ணாவிரதம் என்றும் அவர் கூறியுள்ளார்.