தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
தர்மபுரி: தர்மபுரி மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. இதையடுத்து வரும் 25ம் தேதி சென்னையில் கவுன்சிலிங் நடக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் தர்மபுரி கல்லூரியும் ஒன்று. இந்தக் கல்லூரியில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்தது.
ஒவ்வொரு புதிய மருத்துவக் கல்லூரியிலும் முதல் 5 ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் குழு வருடந்தோறும் ஆய்வு செய்து அந்தந்த வருடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கும்.
இந்த வகையில் இந்தாண்டு தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி தரவில்லை. உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி இந்த அனுமதியைத் தர மறுத்துவிட்டது கவுன்சில்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி்ல் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
இதையடுத்து தர்மபுரி மருத்துவ கல்லூரியில் மீண்டும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும்படி மருத்துவ கவுன்சிலுக்கு கடந்த மாதம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சில் குழு கல்லூரியில் ஆய்வு நடத்தியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோக் தேசாய், போதுமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டதால் தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.
இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங், மருத்துவ கல்லூரியில் தங்கள் குழுவினர் ஏற்கனவே நடத்திய ஆய்வு திருப்திகரமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ கவுன்சிலின் ஆய்வறிக்கையை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவையடுத்து தர்மபுரி மருத்துவக் கல்லூரிக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி விட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தர்மபுரி மருத்துவ கல்லூரியில் உள்ள 85 இடங்களுக்கும், கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 65 இடங்களுக்கும் வரும் 25ம் தேதி கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் நடைபெறும்.












Click it and Unblock the Notifications