சென்னையில் மீண்டும் ஒரு மெகா நிதி நிறுவன மோசடி
சென்னை: தமிழகத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது ஒரு நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தி்ன் உரிமையாளர் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட் மும்பை போலீசார் முடக்கியுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்துக்கு டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் கிளைகள் உள்ளன.
அதே போல அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது.
சென்னையில் இந்த நிறுவனத்தில் சுமார் 40,000 பேர் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு காசோலை மூலம் அனுப்பும் லாபத் தொகையை கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனம் அனுப்பவில்லை. இதனால் மும்பையில் இந்த நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்து விட்டனர்.
இந் நிலையில் சென்னையிலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பணம் வருவது நின்று போய்விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இந்த நிறுவனமும் கடந்த சில நாட்களாகத் திறக்கப்படவில்லை.
சென்னையில் இதுவரை 40 பேர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு்ள்ளது.
இந் நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் சையத் மசூத் மும்பையில் வசித்து வருகிறார். இவரது குடும்பம் அமெரிக்காவில் வசிப்பதாகத் தெரிகிறது.
மசூத் மீது இவர் புகார்கள் குவிந்துள்ளதால் இவரது பாஸ்போர்ட்டை மும்பை போலீசார் முடக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், சிட்டிலிமோஸின்ஸ் நிறுவனம் தாங்கள் மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணம் முழுவதும் பத்திரமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி தருவோம் என்றும் அறிவித்துள்ளது.