அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள் - இலங்கை மீது ஐ.நா. தடை வருமா?
இதன் காரணமாக இலங்கையை விட இந்தியாதான் பெரும் கவலை அடைந்துள்ளதாம். காரணம், இலங்கையில் என்ன நடந்தாலும் அது தமிழகத்தில் எதிரொலிக்குமே என்ற அச்சத்தால்.
சமீபத்தில் இலங்கை சென்ற ஐ.நா. உயர் அதிகாரி லின் பாஸ்கோ பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரின்போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசும், அதிபரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மனித உரிமை மீறல்கள் குறித்த விரிவான, சுதந்திரமான தனி நபர் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணையில் போர்க் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட வேண்டும்.
மேணிக்பார்ம் முகாமில் உள்ள தமிழர்களின் நிலை மிக மோசமாக, அவலமாக உள்ளது. அங்கு தமிழர்கள் நடத்தப்பட்டு வரும் விதம் கண்டனத்துக்குரியதாக உள்ளது.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் உள்ளனர். இது கவலை அளிக்கிறது. குறிப்பாக சில பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களுக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அங்குள்ள தமிழ் மக்கள் பெரும் அதிருப்தியுடனும், கவலையுடனும் உள்ளனர்.
எந்த அரசியல் பிரச்சினைக்கும், ராணுவத் தீர்வு நிரந்தரமாக அமையாது. அமைதி நீடிக்க வேண்டுமானால் சுமூகமான முறையில்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகள் முழுமையாக தரப்பட வேண்டும். அப்போதுதான் அங்கு அமைதி நில முடியும் என்றார் லின் பாஸ்கோ.
இலங்கை அரசு இதுவரை தன் மீது சுமத்தப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்டவற்றை சீனா, இந்தியா, ரஷ்யாவின் உதவியோடு சமாளித்து வந்தது. ஐநா. பாதுகாப்பு சபையில் தனக்கு எதிராக நடந்து விடாமல் சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியோடு தப்பித்து வந்தது.
ஆனால் ஐ.நா.வில் உள்ள சக்தி வாய்ந்த உறுப்பினர்கள் இனியும் இலங்கை குறித்து அமைதி காக்க விரும்பவில்லை. அவர்கள் கோபமடைந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்காக இலங்கை எதுவுமே செய்யாமல் இருப்பது அவர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்டவற்றைக் கொண்டு வரும் முயற்சியில் அந்த நாடுகள் இறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன் விரைவில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே வலுத்து வருகிறது. இதனால் இலங்கைக்குக் கடும் பாதிப்பு ஏற்படக் கூடும். இந்த நிலையில், ஐ.நா.வின் தடையும் வந்து சேர்ந்தால் இலங்கை மேலும் தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயங்கள் உள்ளன.