தீவிரவாத பயம் - ஆஸி. முதல்வரின் மும்பை பயணம் ரத்து
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பியின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்ததை போல் விரைவில் வெளிநாட்டினரை குறி வைத்து மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அந்நாடு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக படிக்க சென்ற இந்திய மாணவர்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய அரசு அதிக கவனம் செலுத்தவில்லை என இந்தியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதையடுத்து அடுத்தாண்டு படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் வெகுவாக குறைந்துவிடும் என பயந்த ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பியை இந்தியாவுக்கு அனுப்பி சமரசம் ஏற்படுத்த முயற்சி செய்தது.
தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பைக்கு மேற்கொள்ளவிருந்த அவரது சுற்றுப்பயணம் டெல்லியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை அடுத்து அது ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.