கொழும்பு கார் விபத்தில் கருணா காயம்
கொழும்பு: கொழும்பில் நடந்த கார் விபத்தில் சிக்கிய கருணா லேசனா காயத்துடன் தப்பி விட்டார்.
விடுதலை புலிகளின் இயக்கத்திற்கு எதிராக திரும்பி துரோகி என்ற பட்டத்துடன் அரசுப் படைகளுக்கு ஆதரவாக திரும்பியவர் கருணா.
தற்போது ராஜபக்சே கட்சியில் சேர்ந்து கொண்டு, அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை ராணுவத்துக்கு பல முக்கிய திட்டங்களை வகுத்து கொடுத்து தமிழனத்துக்கு துரோகம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் வவுனியா பகுதியில் முகாம்களில் இருக்கம் 5 ஆயிரம் தமிழர்களை சொந்த பகுதிக்கும் அனுப்பும் விழாவில் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு திரும்பினார். நேற்று மாலை விமான நிலையத்தில் இருந்து சின்னமோன் கார்டன் பகுதியில் அவரது கார் வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியது.
இந்த சம்பவத்தில் கருணா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதில் அவரது பாதுகாவலரும், டிரைவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய ஒருமைபாட்டு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
கருணாவுக்கு லேசான காயம் தான். அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. தற்போது அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்றார்.