ஸ்டாலின் நிகழ்ச்சி-பட்டாசு வெடித்து 7 பேர் காயம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் வெடிக்கப்பட்ட பட்டாசு, அங்கு கூடியிருந்த பெண்கள் பகுதியில் விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
சின்னசேலம் எம்எல்ஏ உதயசூரியன் இல்ல திருமண விழா நேற்று கள்ளக்குறிச்சி வடக்கனேந்தலில் நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அங்கிருந்து பன்ருட்டிக்கு கிளம்பினார். அவரது கார் மதியம் சுமார் 12.30 மணிக்கு தியாகதுருகம் பகுதிக்கு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து கிராம மக்களும் அங்கு பெரும் திரளாக கூடியிருந்தனர். அப்போது அங்கு திமுகவை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்தனர். அதில் ஒன்று தாறுமாறாக வெடித்து சிதறி, பெண்கள் அதிகமிருக்கும் பகுதிக்குள் சென்று விழுந்தது.
இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
இந்த சம்பவத்தில் குருபீடம் சுந்தரமூர்த்தி மனைவி அஞ்சலை (36), மணிப்பிள்ளை மனைவி சாரதா (30), தில்லைவனம் மனைவி மாசிலாமணி (50), அய்யாக்குட்டி மனைவி கடுச்சி (50), வேல்முருகன் மனைவி அலமேலு(22), முருகேசன் மனைவி தேவகி (50) மற்றும் வேளாக்குறிச்சியை சேர்ந்த ஜெயபால் (30) ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார பகுதியில் முதல் உதவி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் சாரதா என்பவரை தவிர்த்து மற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications