தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம்-டாக்டர் சேதுராமன்
ராமநாதபுரம்: தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தென்மாநில இயக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது,
தேசியத்துக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தென் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்மாநில இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து சமூகத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில்,மாநிலங்களை பிரிப்பது தொடர்பாக 15 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், தென்தமிழகம் பிரிய வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.
வேலை வாய்ப்புக்காக தென்மாவட்ட மக்கள், வட மாவட்டங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது எடுக்கப் பட்ட வாக்காளர் கணக்கெடுப்பில் தென்மாவட்ட ஓட்டு எண்ணிக்கை குறைந்துள்ளது. தனி மாநிலம் கிடைக்கும் பட்சத்தில் தான் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
தெற்கும் வாழவேண்டும் என்பதற்காக தான் இந்த இயக்கத்தை துவங்கி உள்ளோம். தென் தமிழகத்தைப் பிரிக்கக் கோரி, 25 விதமான போராட்டங்களை இந்த அமைப்பு சார்பில் நடத்த உள்ளோம்.
தேசிய நதிகளை இணைப்பதால் வடமாநிலங்களில் வெள்ள நிவாரண நிதியும், தென் மாநிலங்களில் வறட்சி நிதியும் தவிர்க்கப்படும் என்றார்.