ஜஸ்வந்த்தை நீக்கியதில் எனக்கு உடன்பாடில்லை-அத்வானி
மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்து விவாதிக்க சிம்லாவில் கூட்டப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதே நேரத்தில் கட்சியின் தோல்வி குறித்து அக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவில்லை.
ஜஸ்வந்தை நீக்கி, பிரச்சனையை திசை திருப்பியதோடு அந்தக் கூட்டம் முடிந்துவிட்டது.
இந் நிலையில் ஜஸ்வந்த் சிங்கை நீக்கும் முடிவை கூட்டம் எடுத்தபோது, அதை அத்வானி ஆதரிக்கவில்லை என்றும், ஜின்னா குறித்த புத்தகத்தில் வல்லபாய் படேல் குறித்து சிங் தவறாக எழுதியதை சுட்டிக் காட்டி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் அவரை நீக்குவதில் குறியாக இருந்ததாகவும் அத்வானி தரப்பிலிருந்து கடந்த சில நாட்களாக மீடியாக்களுக்கு செய்தி லீக் செய்யப்பட்டு வந்தது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய அத்வானி,
பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங்கை நீக்கி எடுக்கப்பட்ட முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்று வெளியாகும் தகவல் சரியானதுதான். ஆனால் அது தொடர்பான மேலும் சர்ச்சையில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்றார்.
காண்டஹார் விமான கடத்தல், ஓட்டுக்கு நோட்டு ஆகிய விஷயங்களில் அத்வானியை தான் பாதுகாத்ததாகவும் ஆனால், தன்னை நீக்க கட்சி முடிவெடுத்தபோது தனக்கு ஆதரவாக அத்வானி பேசவில்லை என்றும் ஜஸ்வந்த் சிங் குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது.
அத்வானி மேலும் கூறுகையி்ல், கடந்த தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த போதிலும், நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிடவில்லை. 8 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதில் இரு மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தலையொட்டி அந்த மாநிலங்களில் அக்டோபர் மாதம் 10 நாட்கள் நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன். இந்த தேர்தல் முடிவடைந்ததும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களிலும் கட்சி ஊழியர்கள் கூட்டங்களிலும் பேச இருக்கிறேன் என்றார்.