கோவை குண்டுவெடிப்புக் கைதிகள் விடுதலை - பாஜக கண்டனம்
டெல்லி: கோவை தொடர் குண்டுவெடிப்பு கைதிகள் 9 பேரை விடுவித்துள்ள தமிழக அரசின் முடிவு அப்பட்டமான வாக்கு வங்கி அரசியல் என்று பாஜக வர்ணித்துள்ளது.
அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற முகம்மது இப்ராகிம், அப்துல் ரஹீம், அப்துல் பரூக், அப்பாஸ், முகம்மது ரபீக், அப்துல் ராப், அஷ்ரப், பக்ருதின் அலி அகமது, ஷாகுல் ஹமீது உள்ளிட்ட 10 அல் உம்மா அமைப்பினரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
மேற்கண்ட 9 பேர் மீதும் வேறு எந்த வழக்கும் இல்லாததால் அவர்கள் செப்டம்பர் 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். 10வது நபர் மீது இன்னொரு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் விடுவிக்கப்படவில்லை.
மேற்கண்ட பத்து பேருக்கும் கோவை தனி நீதிமன்றம் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மிக மோசமான வாக்கு வங்கி அரசியலையே இது காட்டுகிறது. இதனால் தீவிரவாதிகளும், அவர்களின் காப்பாளர்களும் சுதந்திரமாக நடமாட வழி ஏற்பட்டு விடும்.
இதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. இவர்கள் செய்தது சாதாரண குற்றமல்ல. பல அப்பாவிகளின் உயிரைக் குடித்த தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள்.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது பாஜக தலைவர் அத்வானி அங்கு பொதுக் கூட்டத்தில் பேசவிருந்தார். அவரது உயிரைக் குறி வைத்துத்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்வானி வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமானதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார் என்று கூறினார் ரவிசங்கர் பிரசாத்.
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் பல்வேறு இடங்களில் 19 வெடிகுண்டுகள் வெடித்தன. 50க்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 166 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 57 பேருக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications