ஏர் இந்தியாவில் 50% ஊக்கத் தொகை வெட்டு
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களின் ஊக்கத் தொகையில் 50 சதவீத வெட்டு அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் நஷ்டம் மற்றும் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெட்டு அமல்படுத்தப்படவிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பளக் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடவும் ஏர் இந்தியா யோசித்து வருகிறது.
இதனால் யூனியனில் இல்லாத மேலாளர்கள், மூத்த நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உற்பத்தித் திறன் சார்ந்த ஊக்கத் தொகைகள் (PLI) கணிசமாகக் குறையும்.
செலவுக் கட்டுப்பாடு மற்றும் சம்பளக் குறைப்பை மேற்கொண்டால் மட்டுமே மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு விட்டதால், இந்த நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்கிறது ஏர் இந்தியா.
அதே நேரம் இந்த சம்பள வெட்டுக்கு சில யூனியன்கள் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளன. பெரும்பாலான ஊழியர்கள் உறுப்பினராக உள்ள யூனியன்கள் மெளனம் காக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர் யூனியன் ஏற்கெனவே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.