வரி:எஸ்பிஐ முதலிடம்-ரூ.1,832 கோடி செலுத்தியது
டெல்லி: இரண்டாவது காலாண்டில் அதிக வரி செலுத்திய நிறுவனம் என்ற பெருமையை ஸ்டேட் பாங்க் ஆப் பெற்றுள்ளது. அந்நிறுவனம் ரூ. 1, 832 கோடி வரி செலுத்தியுள்ளது.
இரண்டாவது காலாண்டுக்கான வரி முன்தொகை செலுத்துவது கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது வரி முன்தொகை சுமார் 13.10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ரூ. 49 ஆயிரத்து 502 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் 6 சதவீதம் குறைந்திருந்த இது தற்போது நன்றாக உயர்ந்திருப்பது பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதையே காட்டுகிறது.
ஆனால் இந்தியாவின் டாப் 50 நிறுவனங்களில் 12 கடந்த காலாண்டை விட தற்போது குறைவாகவே வரி செலுத்தியுள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வறட்சியால் இது லேசாக பாதிக்கவும்படலாம். ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து விழாக்கள் வருவதால் மூன்றாவது காலாண்டில் இது மேலும் அதிகரிக்கும்.
கார்பரேட் வரிகள் இரண்டாவது காலாண்டில் ரூ. 44 ஆயிரத்து 010 கோடியாக அதிகரித்துள்ளது. அதவாது சுமார் 14.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 20 ஆயிரத்து 728 கோடியாக ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் முதல் காலாண்டில் 44 சதவீதம் குறைந்திருந்த தனிநபர் வருமான வரி தற்போது 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இரண்டாவது காலாண்டில் ரூ. 5 ஆயிரத்து 492 கோடியாக இருக்கிறது.
அதிக வரி செலுத்திய நிறுவனங்கள் வரிசையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ. 1,832 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஒஎன்ஜிசி 2வது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் 3வது இடத்தை பிடித்துள்ளன.
என்றாலும் ஒஎன்ஜிசி, செய்ல், ஐசிஐசிஐ வங்கி, சிட்டிபாங்க், அம்புஜா சிமென்ட்ஸ் போன்றவை கடந்த காலாண்டை விட குறைவாக வரி முன்தொகை செலுத்தியுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சிக்கு கடந்த ஜூன் மாதத்தில் இந்திய தொழிற்சாலைகள் 8.2 சதவீதம் மற்றும் ஜூலையில் 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டதே காரணம் என கூறப்படுகிறது.
அதேபோல் ஆட்டோமொபைல் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது. மாருதி கடந்த காலாண்டை விட 97.76 சதவீதம் அதிக வரி கட்டியுள்ளது. பஜாஜ் ஆட்டோ 90 சதவீதம் அதிகமாக வரி செலுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் இரண்டு மடங்கிற்கு மேல் வரி முன்தொகை செலுத்தியுள்ளன. இன்போசிஸ் 100 சதவீதம் அதிகமாக ரூ. 300 கோடி வரி செலுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 171.60 சதவீதம் அதிகமாக ரூ. 220 கோடி கட்டியுள்ளது.
ஏசிசி சிமென்ட்ஸ் நிறுவனம் 257 மடங்கு அதிகமாக ரூ. 150 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி 35.71 சதவீதம் அதிகமாக ரூ. 475 கோடியும், பாங்க் ஆப் இந்தியா 199 சதவீத உயர்வுடன் ரூ. 269 கோடியும் செலுத்தியுள்ளன.
ஆனால், செய்ல் நிறுவனம் 13.48 சதவீதம் குறைவாக, ரூ. 918 கோடி வரி செலுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications