ஜசிசி ரேங்கிங்-முதலிடத்தை பிடித்த இந்தியா
துபாய்: ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என மூன்று அணிகளும் தரவரிசையில் இரண்டு புள்ளி வித்தியாசத்தில் இருக்கின்றன. இதையடுத்து ஒரு போட்டியில் ஏற்படும் வெற்றி தோல்வி தரவரிசையை உடனடியாக மாற்றிவிடுகிறது.
சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரின் போது நியூசிலாந்தை வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால், மறுநாள் இலங்கையுடன் லீக் போட்டியில் தோல்வியடைந்ததால் மூன்றாவது இடத்துக்கு பின்தங்கியது.
பின்னர் அத்தொடரின் பைனலில் கோப்பை கைப்பற்றியதை அடுத்து இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது.
அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3வது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா 6-0 என வெல்ல, முதலிடம் அவர்கள் வசமானது. தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்துக்கும், இந்தியா 3வது இடத்துக்கும் வந்தது.
இங்கிலாந்து தொடரின் ஏழாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்க மீண்டும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, தென் ஆப்ரிக்கா முதலிடம் பிடித்தது.
இந்நிலையில் நேற்று நடந்த சாம்பியன் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்கா, இலங்கையிடம் தோற்றதை அடுத்து இரண்டாவது இடத்திலிருந்த இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா 2வது, தென் ஆப்ரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளன.
இதையடுத்து இந்திய அணி வரும் 26ம் தேதி நடக்கும் போட்டியில் பாகிஸ்தானை வென்றால் தொடர்ந்து முதலிடத்திலே இருக்கலாம்.