இலங்கை கடத்திய 21 மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்ட 21 தமிழக மீனவர்களும் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 16-ந் தேதி கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். பின்னர் 21 மீனவர்களை பிடித்துச் சென்று விட்டனர்.
21 மீனவர்களையும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
இவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கால்வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீனவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. அதன் பேரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் பாம்பனில் உள்ள நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் நேற்று மன்னார் கோர்ட் பதிவாளர் அபுபக்கருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அப்புக்கர் கூறுகையில், அனுராதபுரம் சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்களை வியாழக்கிழமை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி 21 மீனவர்களும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இன்னும் சில நாட்களில் ராமேஸ்வரம் வந்து சேருவார்கள் என கூறப்படுகிறது.