Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவர் தாக்குதல்: பிரதமரிடம் 29ம் தேதி மனு, டெல்லியில் உண்ணாவிரதம் - விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக மீனவர்களைக் காக்கக் கோரி வருகிற 29ம் தேதி டெல்லியில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும். அன்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்படும் என கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த தனது பிறந்த நாளான 25.8.2009 அன்று பிறந்த பெண் குழந்தைகளுக்கு உதவும் ஒரு திட்டத்தை அறிவித்து இருந்தார். அதன்படி அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் டெபாசிட் செய்து அதற்கான பத்திரத்தை வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.

இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 100 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான வைப்பு நிதிக்கான பத்திரங்களை குழந்தைகளின் பெற்றோர்களிடம் விஜயகாந்த் வழங்கினார்.

பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கடலில் சுடப்படும் சம்பவம் கடந்த 26 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஆளும் கட்சி எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். எதிர்க் கட்சியினர்தான் பிரதமரிடம் இது போன்ற மனுக்களை கொடுப்பார்கள்.

ஆனால் ஆளும் கட்சியே இப்போது மனு கொடுத்து இருக்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அனைத்தும் தெரியும். அவரும் மனு கொடுக்கிறார்.

தினம் தினம் தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள். அதற்கு நிரந்தர தீர்வு என்ன? கச்சத் தீவை இலங்கைக்கு கருணாநிதி தாரை வார்த்து கொடுத்துவிட்டு இப்போது, கச்சத்தீவை நாம் குத்தகைக்காவது எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இது சொந்த வீட்டை கொடுத்துவிட்டு அதை வாடகைக்கு கேட்பது போன்ற மோசமான நிலை ஆகும்.

முன்பு தமிழக மீனவர்கள் கடலில் சுடப்பட்டபோது விடுதலைப்புலிகள் சுட்டுவிட்டனர் என்று கூறினார்கள். இப்போது விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டதாக கூறுபவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? பிரதமரிடம் மனு கொடுத்துள்ளது கண்துடைப்புதான்.

தமிழக மீனவர்களை பாதுகாக்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் எனது தலைமையில் டெல்லியில் வருகிற 29-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறோம். அப்போது பிரதமர் மன்மோகன்சிங்கையும், மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்தித்து மனு கொடுக்க நேரம் கேட்டு இருக்கிறோம்.

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினையில் நாம் அடாவடித்தனமாக நடந்தால்தான் அது நமக்கு கிடைக்கும் என்று நான் கூறினேன். அப்போது கர்நாடகத்தில் தேர்தல் நடக்கிறது. நாம் அமைதி காக்க வேண்டும் என்று கருணாநிதி கூறிவிட்டார்.

இப்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையும் அதேபோல்தான் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு அணை கட்டும்போது, அங்கு தேர்தல் நடக்கிறது. அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி கூறுவார் என்றார் விஜயகாந்த்.

நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்த பாலப்பள்ளத்தைச் சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரி கோபிகா (26) தனது 3 மாத பெண் குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். அந்த குழந்தைக்கு விஜயகாந்த் ரூ.10 ஆயிரத்துக்கான வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார்.

கோபிகா, கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வரதட்சணை காரணமாக கணவரின் வீட்டைவிட்டு அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவர் கடந்த 7-ந் தேதி கணவர் வீட்டு முன்பு சத்தியாகிரக போராட்டம் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக தே.மு.தி.க.வும் போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இன்று முதல் தனது கணவர் வீட்டு முன்பு மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோபிகா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+