மின் ஊழியர்களுக்கு 20% போனஸ்-ஊதிய உயர்வு
சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆற்காடு வீராசாமி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்கத்தினர் 25 சதவீத போனஸ் கோரினர்.
ஆனால், மின்துறையின் கஷ்டமான நிதி நிலையை விளக்கிய ஆற்காடு வீராசாமி 20 சதவீத போனஸ் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இதை சங்கத்தின் ஏற்றுக் கொண்டனர்.
இதன்மூலம் மின்வாரியத்தில் பணியாற்றும் 64,722 ஊழியர்களுக்கு ரூ. 58.50 கோடி போனசாக வழங்கப்படும்.
மேலும் தற்காலிக பணியாளர்கள் 5,516 பேர் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், 2011ம் ஆண்டுக்குள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் வீராசாமி உறுதியளித்தார்.
இதைத் தவிர தீபாவளி பரிசாக மின்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்றும் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.