நிலவில் நீர்..இஸ்ரோ உதவியுடன் கண்டறிந்தோம்-நாசா
வாஷிங்டன்: நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பது உண்மைதான். இதை இஸ்ரோவின் சந்திரயான்-1 உதவியுடன் நாசா கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
இதை நாசா விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த நாசாவின் எம்3 எனப்படும் மூன் மேப்பர் சாதனம் கண்டுபிடித்துள்ளது. இது இஸ்ரோவை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இதுகுறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாசாவின் கிரக அறிவியல் பிரிவின் இயக்குநர் ஜிம் கிரீன் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியதற்காக இஸ்ரோவுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். இதுவரை நிலவை வறண்ட ஒரு பகுதியாகவே நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அங்கு தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது.
இஸ்ரோவின் உறுதுணையுடன், நாசாவின் எம்3, நிலவின் தளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இது முக்கியமான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
எதிர்பார்த்த அளவை விட அதிக அளவிலா நீரை உருவாக்கக் கூடிய மூலக்கூறுகள் அங்கு இருப்பது வியப்பளிக்கிறது. இந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு நாசா மற்றும் இஸ்ரோ இடையிலான சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளது என்றார்.
இதற்கிடையே, ஏரி அளவுக்கோ, கடல் அளவுக்கோ அல்லது குளம் அளவுக்கோ நிலவில் தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1000 நீர் மூலக்கூறுகள் நிலவில் இருக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications