சென்னைக்கு வரும் அமெரிக்காவின் கார்ல்சன் ஹோட்டல்
96 அறைகளுடன் கூடிய ஹோட்டலாக சென்னை எழும்பூரில் கால் பதிக்கிறது கார்ல்சன். ரூ. 78 கோடி முதலீட்டில் இந்த ஹோட்டல் கட்டப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு கன்ட்ரி இன் அன்ட் சூட்ஸ் என்ற பெயர் சூட்டப்படுகிறது.
ஏற்கனவே எழும்பூரில் செயல்பட்டு வந்த வைகை ஹோட்டல் இருந்த அதே இடத்தில்தான் கார்ல்சன் ஹோட்டல் எழும்புகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வைகை ஹோட்டல் 58 அறைகளுடன் செயல்பட்டு வந்தது. சமீபத்தில் அது மூடப்பட்டது.
இதுகுறித்து கன்ட்ரி இன் அன்ட் சூட்ஸ் ஹோட்டல் இயக்குநர் ஜெயகாந்த் கூறுகையில், 9.6 கிரவுண்டு நிலப்பரப்பில் 11 மாடிகளுடன் கூடியதாக 96 அறைகளுடன் புதிய கார்ல்சன் ஹோட்டல் அமைகிறது. இவற்றில் தற்போது 48 அறைகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வருகின்றன.
ஹோட்டலில் இரண்டு ரெஸ்டாரன்ட்டுகள், ஒரு மாநாட்டு அரங்கு ஆகியவை இடம் பெறுகின்றன. நீச்சல் குளம் மற்றும் பார் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஹோட்டலின் உரிமை மற்றும் நிர்வாகம் வைகை ஹோட்டலின் புரமோட்டரான என்கேகே ஹோட்டல்ஸ் வசம் இருக்கும். மார்க்கெட்டிங் மற்றும் பிரான்ட் மேம்பாடு ஆகியவற்றை கார்ல்சன் பார்த்துக் கொள்ளும்.
சென்னையில் உள்ள ரேடிசன் ஹோட்டல் மற்றும் மக்னூர் ஹாஸ்பிடாலிட்டி இந்தியா ஆகியவற்றில் என்கேகே ஹோட்டல்ஸுக்கு முக்கியப் பங்கு இருந்தது. பின்னர் ரேடிசனை ஜிஆர்டி குரூப் வாங்கி விட்டது.
இவை தவிர கொடைக்கானலில் உள்ள வைகோ இன் ஹோட்டலையும் என்கேகே ஹோட்டல்ஸ் வைத்துள்ளது. தற்போது இது குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
சர்வதேச ஹோட்டல் குழுமமான கார்ல்சன் வசம் ரிஜென்ட், ரேடிசன், பார்க் பிளாசா, பார்க் இன் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது 10 கன்ட்ரி இன் அன்ட் சூட்ஸ் ஹோட்டல்கள் இதன் வசம் உள்ளன.