பாளையங்கோட்டை சிறையில் தலித் கைதிகள் மோதல்- ஒருவர் பலி
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையில் தலித் கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவ்டடம் கீழப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (52). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் செல்லத்துரையும் ஒருவர்.
ஆனால் விடுதலையாகி வெளியே வந்த சில நாட்களிலேயே அவர் 1994ல் நடந்த மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குள் அடிக்கடி ஜாதிச் சண்டை நடப்பதால் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் தனித் தனியாக ஜாதி வாரியாக அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தலித் வகுப்பைச் சேர்ந்தவரான செல்லத்துரை தலித் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த செல்லில் அடைக்கப்பட்டார்.
அந்த செல்லில் 60 கைதிகள் இருந்துள்ளனர். அப்போது செல்லத்துரைக்குப் பிடிக்காத கோஷ்டியைச் சேர்ந்த கைதிகள் சிலர் சேர்ந்து செல்லத்துரையை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்தார் செல்லத்துரை.
இதையடுத்து நேற்று இரவு அவரை மருத்துதவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் செல்லத்துரை மரணமடைந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபு, சிங்காரம் உள்ளிட்ட 3 கைதிகள் மீது போலீஸார் சந்தேகமடைந்து அவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
செல்லத்துரை கொலையால் கீழப்பாட்டம் கிராமத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கீழப்பாட்டம் கிராமத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.