திறமையான, வளரும் தலைவர் ராகுல் காந்தி - சத்ருகன் பேச்சு - கடுப்பில் பாஜக
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன் சின்ஹா, மிகக் கடுமையாக உழைக்கிறார் ராகுல் காந்தி. அவரது செயல்பாடுகளை பொது ஜனங்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகின்றனர். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. திறமை வாய்ந்த, ஒரு வளரும் தலைவர் ராகுல் காந்தி.
அவர் தேர்ந்தெடுத்துள்ள பாதை சரியானது. அவரது முயற்சிகளுக்கும், காரியங்களுக்கும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
இது எனது தனிப்பட்ட கருத்துதான். இதில் எந்த அரசியலும் இல்லை என்றார் சத்ருகன் சின்ஹா.
சத்ருகன் சின்ஹா இப்படி ராகுல் காந்தியை புகழ்ந்து தள்ளியிருப்பது பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராகுலுக்கு எதிராக இல.கணேசன் போராட்டம்:
இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு பயன்தரும் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் நதிநீர் இணைப்பை வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணியளவில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
எனது தலைமையில் நடைபெற இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அது போலவே தமிழக அரசு, சட்டசபை மூலமாக நிறைவேற்றியிருக்கும் “தமிழ் நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்டம்" எனும் சட்டத்தை திரும்பப் பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.