சென்னை சர்வதேச மாரத்தான்- 60,000 பேர் பங்கேற்பு
சென்னை: சென்னை அரை மாரத்தான் போட்டி நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 60 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை தமிழக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பூங்கோதை கலந்து கொண்டார்.
21 கிமீ., 7 கிமீ., மற்றும் ஊனமுற்றவர்களுக்கான வீல்சேர் பிரிவு என மூன்று வகை போட்டிகள் நடந்தது. இதில் கென்யாவை சேர்ந்த ஜான் வாம்பஸ் என்ற வீரர் முதலிடம் பிடித்து ரூ. 5 லட்சம் பரிசு வென்றார்.
முதலிடம் பிடித்த இந்தியரான ராஜஸ்தான் மாநில தீப்சந்த் சாகாரமுக்கும், தமிழகத்தை சேர்ந்த நாகேந்திர ராவுக்கும் தலா ரூ. 1 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.
இது குறித்து போட்டியை நடத்திய குட்வில் கம்யூனிகேசன் என்ற அமைப்பை சேர்ந்த ஜெகத் காஸ்பர் கூறுகையில்,
மாரத்தான் போட்டி வெற்றிகரமாக நடந்தது. முழு திருப்தியளிக்கிறது. இது சென்னையில் நடப்பது இரண்டாவது முறை என்றாலும் சர்வதேச அந்தஸ்து மற்றும் ஊனமுற்றோர் பிரிவுகள் முதல் முறையாக இடம்பெற்றன.
இதன்மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னையில் இருக்கும் ஒரு என்ஜிஓ அமைப்புக்கு கொடுக்கப்படும் என்றார்.