ஐ.நா-காலி அரங்கில் பேசிய இலங்கை பிரதமர்
ஐ.நா.: இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே தனது நாட்டின் வீர பராக்கிரமம் குறித்து ஐ.நா. அவையில் பேசியபோது, அதைக் கேட்க அங்கு ஒரு சிலரே இருந்தனராம். பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டனராம்.
ஐ.நா. ஆண்டு சபைக் கூட்டத்தில் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகேவும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும் கலந்து கொண்டனர். ஐ.நா. கூட்டத்தில் விக்கிரநாயகே 25ம் தேதி பேசினார்.
அப்போது கிட்டத்தட்ட சபையே காலியாக இருந்ததாம். ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் கிடந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை படைகள் வெற்றி கொண்ட வீர பராக்கிரமம் குறித்து ரொம்ப நேரம் பேசினாராம் விக்கிரமநாயகே.
விக்கிரமநாயகே விழுந்து விழுந்து பேசிக் கொண்டிருந்ததையும், அதைக் கேட்க ஆளே இல்லாததையும் பார்த்து கோத்தபயா ராஜபக்சேவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவும் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தனராம்.
விக்கிரமநாயகே பேசுகையில், எங்களது நம்பிக்கைகளையும், கவலைகளையும் ஐ.நாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார். இலங்கையின் வெற்றிக் கதையை மட்டுமே பேசிய விக்கிரமநாயகே, இலங்கையில் பத்திரிக்கைச் சுதந்திரம் அமுக்கப்பட்டிருப்பது, ஏராளமான படுகொலைகள் நடந்து வருவது குறித்தோ, ஐ.நா. அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள், வெளியேற்றம் குறித்தோ மூச்சுக் கூட விடவில்லை.
இந்த நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமாவை, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபான்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது இலங்கை வர விரும்புவதாக இங்கிலாந்து, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் கூறினார்களாம். ஏற்கனவே இருவரும் சேர்ந்து இலங்கை வரவிருந்தனர். ஆனால் மிலிபான்ட்டுக்கு மட்டும் விசா கொடுத்த இலங்கை அரசு, கொச்னாரை விசா தராமல் கடுப்படித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications