பொங்கலூர் திமுக எம்எல்ஏ மீது ஆக்கிரமிப்பு புகார்
திருப்பூர்: திருப்பூர் சங்கிலிப்பள்ளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை ஆக்கிரமித்து பொங்கலூர் திமுக எம்எல்ஏ எஸ்.மணி சுற்றுச்சுவர் கட்டி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் சங்கிலிப்பள்ளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 1.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் வடகிழக்கு பகுதியில் பொங்கலூர் எம்எல்ஏ மணிக்கு சொந்தமான இடம் உள்ளது. தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு சுற்றுச் சுவர் கட்டப்படுகிறது.
இந்த சுற்று சுவரானது நெடுஞ்சாலைத்துறை பாலத்தின் கைப்பிடி சுவரை ஒட்டியும், கல் வெட்டு பதித்துள்ள சுவரை ஒட்டியவாறும், ஹாலோ பிளாக் கற்களை கொண்டு கட்டப்படு வருவதாகவும், அவர் மேம்பால பகுதிகளை ஆக்ரமிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பொங்கலூர் எம்எல்ஏ மணி கூறுகையில்,
பாலம் கட்டும் போது எனது இடத்தை தானமாக கொடுத்துள்ளேன். அதாவது என்னுடைய 10 அடி நிலத்தில் தான் பாலமே கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் நெடுஞ் சாலைத்துறை இடம் எனக்கு தேவையில்லை என்றார்.
இதையடுத்து தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் அருகே உள்ள நிலங்களை சர்வே செய்யும் போது எம்எல்ஏவுக்கு சொந்தமான இடத்தையும் சர்வே செய்ய உள்ளோம். இந்த சர்வே விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications