பாமகவினர் சாலை மறியல் செய்ய ராமதாஸ் திடீர் தடை
விழுப்புரம்: பொது மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் சாலை மறியலை செய்ய வேண்டாம் என கட்சித் தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் சமூக உணர்வோடும், மற்றவர்களுக்கு உதவும் நோக்கோடும் வாழ வேண்டும்.
கட்சி பிரமுகர்கள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பணியாற்றவும், அனைவரிடமும் கட்சி பாகுபாடு இன்றி நடந்து கொள்ள வேண்டும்.
சாலை மறியல் என்றால் என்ன என்பதை உலகுக்கு காட்டியவர்கள் நாம் தான். ஆனால், தற்போது நான் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்த விரும்புவது இல்லை. இதனால் மக்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
தற்போது தமிழகத்தில் ஜாதி, மதம், பேதம் இல்லாமல் சமுதாயத்தை உருவாக்கி உள்ளது போல் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு மற்றும் மகாராஷ்டிரா, குஜராத்தில் உள்ள பட்டியல் இனத்தவர்களோடு பேசி, அங்கேயும் ஜாதியில்லாத மக்களை உருவாக்க சொல்லலாம் என்றார்.












Click it and Unblock the Notifications