குவாத்ரோச்சி மீதான வழக்கை வாபஸ் பெறுகிறது மத்திய அரசு
டெல்லி: கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் போபர்ஸ் பீரங்கி பேர வழக்கை வாபஸ் பெற தீர்மானித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பீரங்கி வாங்கியதில் ரூ. 64 கோடி கமிஷன் அடித்ததாக கூறப்பட்ட இத்தாலி தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி சுதந்திர மனிதராகிறார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனலர் கோபால் சுப்ரமணியம் கூறுகையில், போபர்ஸ் பீரங்கி வாங்கியது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய குவாத்ரோச்சியை நாடு கடத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டன.
மேலும், 2004ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
இதைக் கணக்கில் கொண்டு போபர்ஸ் வழக்கை வாபஸ் பெற சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதை ஏற்றும், வழக்கு தொடர்பான அனைத்தையும் ஆராய்ந்த பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த முடிவின் மூலம் ராஜீ்வ் காந்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போபர்ஸ் ஊழல் வழக்கு மண்ணோடு மண்ணாக புதைக்கப்படுகிறது. குவாத்ரோச்சி சுதந்திர மனிதனாக நடமாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications