ரூ. 6.5 கோடி ஆப்கன் பிரவுன் சுகர் பறிமுதல்-10 பேர் கைது
கோவை: ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 6.5 கோடி மதிப்பிலான போதை பொருட்களை தமிழக போலீஸார் கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் பறிமுதல் செய்தனர். அதை விற்க முயன்ற 10 பேரை கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக போலீஸ் கமிஷனர் சிவனாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய நான்கு பேரை போலீஸார் பின் தொடர்ந்தனர். போலீஸாரை பார்த்த அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அதில் மூன்று பேர் மாட்டி கொண்டனர். ஒருவன் தப்பிவிட்டான்.
அவர்களை சோதனையிட்ட போது ரூ. 1 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகர் சிக்கியது. மேலும், அது ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரின் பெயர்கள் நாமக்கல் ரவி (39), விக்னேஷ் (30), புவனேஸ்வரன் (27) என தெரிய வந்துள்ளது.
அதேபோல் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய பேருந்திலும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல் மாவட்டம் தங்கராஜ், லோகநாதன் ஆகியோரிடம் இருந்து ரூ. 4.5 கோடி மதிப்புடைய பிரவுன் சுகரை கைப்பற்றினர்.
சேலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் திருச்செங்கோடு நாகராஜ், நடேசன், வெங்கடேசன், சரவணன் ஆகிய 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.