தருமபுரி மருத்துவ கல்லூரி சேர்க்கை திடீர் ரத்து-மாணவர்கள் அதிர்ச்சி!
தர்மபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து இந்த கல்லூரியில் சேர கட்டணம் செலுத்திய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 26ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டது. அதில் 84 மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கு அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதியை நீண்ட போராட்டத்துக்கு பிறகே இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியது. ஆனால் மத்திய அரசு நேற்று இரவு வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒப்புதலைத் தொடர்ந்து, மத்திய அரசும் அனுமதி அளித்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இப்போது மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ. 10 ஆயிரத்து 495 கட்டணம் செலுத்திய 84 மாணவர்களும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் தவித்து வருகின்றார்.
இது குறித்து முழுமையான தகவலை அளிக்க மருத்துவ கல்லூரி அதிகாரிகள் மறுத்து விட்டனர்.