அம்பை கோர்ட் முன் வாலிபர் வெட்டி கொலை!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நீதி மன்றம் அருகே வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் ஐயப்பன் (35). டூவீலர் மெக்கானிக். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த இவர் உள்ளூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அம்பாசமுத்திரம் நீதிமன்றம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை ஓட, ஓட துரத்தியது. பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐயப்பன் பலத்த காயத்துடன் ரோட்டில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து, அவரை கிச்சைகாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
தகவல் அறிந்த நெல்லை எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.