ஊனமுற்ற வாலிபரை கொடூரமாக தாக்கிய போலீஸார்
சிவகங்கை: காணாமல் போன காதலர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத போலீஸார், சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினரான ஊனமுற்ற வாலிபரை காவல் நிலையத்தில் வைத்து மிருகத்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சூரக்குடியைச் சேர்ந்தவர் கனகராஜ். 25 வயதாகும் இவர் நெற்குப்பை ஊனமுற்றோர் சங்கம் சார்பில் செயல்படும் தையல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரு கால்களும் ஊனமுற்றவர் கனகராஜ்.
இவரது நண்பர் கண்ணன். இவர் மாவராயன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். சிங்கம்புணரியில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கனகராஜின் மாமா மகள் பிரியா. அவருக்கும் கண்ணனுக்கும் காதல் மலர்ந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து பிரியாவின் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொண்டு ஊருக்கு வருமாறு அழைத்தனர். இதையடுத்து பிரியா திரும்பி வந்தார்.
ஆனால் கடந்த மாதம் மீண்டும் பிரியாவும், கண்ணனும் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
துப்புக் கிடைக்காத போலீஸார், கோபமடைந்து, கனகராஜை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று கொடூரமாக தாக்கி விசாரித்துள்ளனர். தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று அவர் கதறியும் இரக்கமே இல்லாமல் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் கனகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்டேஷனில் வைத்து அடித்தனர். கால்களிலும் மிதித்து துன்புறுத்தினர்.
ஊராட்சி தலைவர் பொன் சண்முகராஜா தலையிட்டு போலீசாரிடமிருந்து மீட்டு வந்தார். முதுகு, கைகளில் கீறல் இருப்பதால் என்னால் தூங்க முடியவில்லை.
இதுகுறித்து எஸ்.பியிடம் முறையிட்டுள்ளதாகவும், தவறு செய்த போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊனமுற்றோர் சங்க தலைவர் புஷ்பராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications