மகாராஷ்டிர தேர்தல்-வருணை ஒதுக்கிய பாஜக
மகாராஷ்டிர சட்டசபைக்கு வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
காங்கிரசுக்காக சோனியா, ராகுல் காந்தி ஆகியோரும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாஜகவுக்காக அத்வானி சூறாவளி சுற்றுப் பயணத்தைத் துவக்கியுள்ளார். ராஜநாத் சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோரும் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
மேலும் சினிமா நட்சத்திரங்களான சத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, டிவி நடிகை ஸ்மிருதி இரானி மற்றும் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
அக் கட்சியின் கூட்டணிக் கட்சியான சிவசேனா மிகத் தீவிரமாக களத்தில் சுழன்று வருகிறது.
சிவசேனாவில் இருந்து பிரிந்து போன ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தனித்துப் போட்டியிடுவது காங்கிரஸ் கூட்டணிக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு மோடியை அத்வானிக்கு அடுத்த பிரதமராக முன் நிறுத்தியதும் வருண் காந்தியின் சிறுபான்மையினர் விரோத பேச்சுமே காரணம் என்று கூறப்பட்டதையடுத்து இம்முறை மோடியை மும்பையி்ல் குஜராத்திகள் நிறைந்த பகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் வருண் காந்தியை பிரச்சாரத்துக்கே வர வேண்டாம் என்று கூறிவிட்டது.