சிவகங்கை வெற்றியை எதிர்த்து வழக்கு - ப.சிதம்பரத்துக்கு நோட்டீஸ்
சென்னை: சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகங்கையில் நடந்த தேர்தலில் ப.சிதம்பரம் (காங்கிரஸ்), ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) உள்பட 20 பேர் போட்டியிட்டனர். இந்த கடுமையான போட்டியில் 3,354 ஓட்டுகள் ராஜகண்ணப்பனைவிட அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் முதலில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக கண்ணப்பன் தாக்கல் செய்த மனுவில்,
ப.சிதம்பரம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்தல் அதிகாரி ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டார். ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது சிவகங்கை தொகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் புதிய கிளைகள் தொடங்கப்பட்டன.
இந்த கிளைகளில் பணிபுரிபவர்கள் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். இப்படிப்பட்ட வங்கி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ரவுண்டு முடிந்த பிறகும் வாக்குகள் பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படவில்லை. முதலில் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு, பின்னர் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர்.
எனவே வாக்குகளை மீண்டும் எண்ண கோரிக்கை விடுத்தேன். ஆனால் தேர்தல் அதிகாரி அதை ஏற்கவில்லை. ஆகவே, ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை ரத்து செய்யவேண்டும். மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.சரவணகுமார் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து 4 வாரத்திற்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு, ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை தேர்தல் அதிகாரி உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.